Showing posts with label ISURU CHAMARA SOMAWEERA. Show all posts
Showing posts with label ISURU CHAMARA SOMAWEERA. Show all posts

Wednesday, August 16, 2017

அவர்கள் நம் அயல்மனிதர்கள் - 04 - எம்.ரிஷான் ஷெரீப்



  
   இக் கால சிறுவர்களின் ஞாபகங்களில் நவீன காலத் தொற்றுநோய்களான வீடியோ விளையாட்டுக்கள், கைபேசி விளையாட்டு, விளையாட்டு மின்சாதனங்கள் எனத் தமக்குள் மாத்திரம் குறுகிய விளையாட்டுக்களே வரக்கூடும். எனினும், 1990 ஆம் ஆண்டுகளிலும், அதற்கு முன்பும் சிறுவர்களாக இருந்தவர்களிடம் அவர்களது பால்ய காலங்களைக் குறித்துக் கேட்டுப் பாருங்கள். மிகவும் இனியதான, பலவிதமான அனுபவங்களை சுவைபடக் கூறுவார்கள்.

     அப் பால்யத்தில் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்குமென பலவிதமான விளையாட்டுக்கள் இருந்திருக்கின்றன. அவையெல்லாம், தாலாட்டுக்களைப் போல வழக்கொழிந்து போயுள்ள இக் காலத்தில், அவற்றை நினைவுகூர்வது கூட சந்தோஷத்தையே அளிக்கிறது அல்லவா?

     இலங்கையில் ஒரு காலகட்டம் இருந்தது. அக் காலகட்டத்தைத் தமது சிறு வயதில் சந்தித்தவர்களுக்கு, இனிமையான, மீண்டும் நினைத்துப் பார்க்க உகந்ததான பால்ய கால நினைவுகள் அமையவில்லை. இலங்கையின் வடக்குகிழக்கில் இந்திய அமைதிப்படையினரின் பயங்கரவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியது. ஏனைய திசைகளிலெல்லாம் ஜே.வி.பி. கலகக்காரர்களின் பயங்கரவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

     தினமும் கலகக்காரர்களால் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தது. இரவுகளில் வீடுகளில் பெரும் வெளிச்சம் துப்பும் விளக்குகளை ஏற்றி வைப்பது கூடத் தடுக்கப்பட்டிருந்த காலமது. அதற்கும் மேலாக மின்மாற்றிகளும், மின்கம்பங்களும் கிளர்ச்சிக்காரர்களால் தகர்க்கப்பட தேசத்தின் ஊர்கள்தோறும் இருள்கள் சூழ்ந்தன. கம்யூனிசத்துக்கும், இடதுசாரிக் கொள்கைகளுக்கும் ஆதரவாகப் பெரும்படைகளாக பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் திரண்டனர். தபாலகங்கள், அரச நிறுவனங்கள், அரச கட்டடங்கள் பலவற்றையும் உடைத்தும், எரித்தும் அழிக்க முனைந்தனர். பஸ், ரயில் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்தன. மீறி நகர்ந்தவை எரிக்கப்பட்டன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மறு அறிவித்தல்வரை இழுத்து மூடப்பட்டன. வீதிகள் வெறிச்சோடின.

           கலகக்காரர்கள் தாங்கள் சொல்வதைச் செய்ய மறுக்கும் அனைவரையும் கொன்றார்கள். தமது பணத் தேவைகளுக்காக வீடுகள் புகுந்து கொள்ளையடித்தார்கள். ஆட்களைக் கடத்திக் கப்பம் கேட்டார்கள். அவர்களை அழித்து ஒழிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் தினமும் தொடர்ந்தன.  தினந்தோறும் இரவுகளில் எல்லா வீதிகளிலும் காவல்துறையினர் மற்றும் கருப்புப் பூனைப்படையினர் ஜே.வி.பி கிளர்ச்சிக்காரர்களை வேட்டையாடவென வலம் வந்தனர். சந்தேகத்துக்குரியவர்களைக் கைது செய்தனர். அவ்வாறு கைதுசெய்யப்படுபவர்கள் மீண்டு வர மாட்டார்கள்.

     இவற்றை இங்கு குறிப்பிடக் காரணம், கீழேயுள்ள சிங்களக் கவிதை. வாசித்துப் பாருங்கள், வெகுதொலைவிலுள்ள கிராமமொன்றிலிருந்து, கலகம் செய்தாரென சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருக்கும் தனது தந்தையைப் பார்க்க வந்து செல்லும் சிறுவனை.

சிறுவன்

முடிவேயற்று மிகவும் நீண்ட
அந்தப் பேரூந்துப் பயணத்தில் வாந்தியெடுத்த


காய்ச்சலுக்கு தெருவோரக் கடையொன்றில்
சாயத் தேனீர் குடித்த


அப்பாவைத் தேடி அம்மாவுடன்
*பூஸாவுக்குச் சென்ற...


கல்லெறிந்து மாங்காய்ப் பிஞ்சுகளை
பையன்கள் பறித்துப் போகையில்
அவர்களுக்கொரு பாடம் புகட்டிட
அப்பா இல்லாததால்
உதடுகளைக் கடித்து
பெருமூச்சைச் சிறைப்படுத்திக் கொண்ட...

ஒருபோதும் தான் காண அழாத அம்மா
மறைவாக அழுவதைக் கண்டு
உறங்காமல்
உறங்குவது போல் தலையணை நனைய அழுத...


ஆற்றில் சுழிகள் உடையும் விதத்தை
இரவுப் பூக்கள் மலரும் விதத்தை
நட்சத்திரங்கள் உதிர்ந்து வீழும் விதத்தை
தன்னந்தனியாகப் பார்த்திருந்த...


எவ்வளவு துரத்தியும் போகாத
அந்தக் கருத்த, ஒல்லியான, விடலைச் சிறுவன்
இருக்கிறான் இன்னும்


நள்ளிரவில் விழித்து அவன்
அவ்வப்போது தனியாக அழுகிறான்


ஈரமாகிறது எனது தலையணை
****

*பூஸா – இலங்கையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களின் சிறைச்சாலை அமைந்திருக்கும் இடம்

     தனது துயரம் சூழ்ந்த பால்யத்தினை நினைத்து வருந்தி இவ்வாறு சிங்களமொழியில் கவிதையெழுதி இருப்பவர் கவிஞர், எழுத்தாளர் இஸுரு சாமர சோமவீர. இலங்கையில் வித்தியாசமான அக உணர்வுகளைக் கொண்டுள்ள சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகப் பாடுபடும் இஸுரு சாமர சோமவீர, சிங்களக் கவிதையுலகில் புரட்சியொன்றைக் கிளப்பியுள்ள, கவிதைகள் மூலமாக உரிமைகளைக் கோரும் கவிஞராக அறியப்பட்டுள்ளார். கவிதைகள் மற்றும் சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.

     நம் வருங்கால சந்ததியினரது பால்யத்துக்கான சூழ்நிலை நமது கையில்தான் இருக்கிறது. இனிதான பால்யம் எல்லோருக்கும் வாய்க்கட்டும். வாய்க்க வழி செய்வோம்.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com


நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்



Saturday, December 1, 2012

என்னை மன்னித்து விடு குவேனி

மேலுதட்டில் வியர்வைத் துளிகளரும்பிய
கருத்து ஒல்லியான இளம்யுவதிகளைக் காண்கையில்
இப்பொழுதும்…
அதிர்ந்து போகிறதென் உள்மனது

தவறொன்று நிகழ்ந்தது உண்மைதான்
நினைவிருக்கிறதா அந் நாட்களில்
தாங்கிக்கொள்ள முடியாத குளிர்
விசாலமாக உதித்த நிலா

பொன் நிற மேனியழகுடன்
எனதே சாதியைச் சேர்ந்த
எனது அரசி
எமதிரட்டைப் படுக்கையில்
ஆழ்ந்த உறக்கத்தில் தனியாக

குழந்தையொன்றை அணைத்தபடி
அரண்மனை மாடியில் நின்று
கீழுள்ள காட்சிகளைப் பார்க்கின்ற
கனவொன்றில் அவள் திளைத்திருக்கக்கூடும்

இருந்திருந்து இப்பொழுதும் உதிக்கிறது
அம் மோசமான நிலா
மண்டபத்திலிருந்து
மயானத்தின் பாழ்தனிமையை
அறைக்குக் காவி வருகிறது

- இஸுரு சாமர சோமவீர
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்நிழல் - இதழ் 35, ஜூலை 2012
# உயிர்மை
#  திண்ணை
# பதிவுகள்

Sunday, November 4, 2012

சிறுவன்

முடிவேயற்று மிகவும் நீண்ட

அந்தப் பேரூந்துப் பயணத்தில் வாந்தியெடுத்த,
காய்ச்சலுக்கு தெருவோரக் கடையொன்றில்
தேயிலைச் சாயம் குடித்த,
அப்பாவைத் தேடி அம்மாவுடன்
*பூஸாவுக்குச் சென்ற...

கல்லெறிந்து மாங்காய்ப் பிஞ்சுகளை
பையன்கள் பறித்துப் போகையில்
அவர்களுக்கொரு பாடம் புகட்டிட
அப்பா இல்லாததால்
உதடுகளைக் கடித்து
பெருமூச்சைச் சிறைப்படுத்திக் கொண்ட...

ஒருபோதும் தான் காண அழாத அம்மா
மறைவாக அழுவதைக் கண்டு
உறங்காமல்
உறங்குவது போல் தலையணை நனைய அழுத...

ஆற்றில் சுழிகள் உடையும் விதத்தை
இரவுப் பூக்கள் மலரும் விதத்தை
நட்சத்திரங்கள் உதிர்ந்து வீழும் விதத்தை
தன்னந்தனியாகப் பார்த்திருந்த...

எவ்வளவு துரத்தியும் போகாத
அந்தக் கருத்த, ஒல்லியான, விடலைச் சிறுவன்
இருக்கிறான் இன்னும்
நள்ளிரவில் விழித்து அவன்
அவ்வப்போது தனியாக அழுகிறான்

ஈரமாகிறது எனது தலையணை

*பூஸா - இலங்கையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களின் சிறைச்சாலை அமைந்திருக்கும் இடம்

- இஸுரு சாமர சோமவீர
- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்நிழல் இதழ் 35 - ஜூலை 2012
# உயிர்மை
# திண்ணை
# நவீன விருட்சம்
# பதிவுகள் 

Friday, October 19, 2012

ஏதோவொன்று

வருவதையும் போவதையும்
கூற முடியாத
குளிரொன்றைப் போன்ற அது
தென்படாதெனினும் உணரலாம்
எம்மைச் சுற்றி இருப்பதை

அது எம்மைத் தூண்டும்
கண்டதையும் காணாதது போல
வாய் பொத்தி, விழிகள் மூடி
ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்க

பசியின் போதும்
குருதி பீறிடும் போதும்
அடுத்தவன் செத்துக் கொண்டிருக்கும் போதும்
அமைதியாக
சடலங்களின் மேலால் பாய்ந்து
நாம் வேலைக்குச் செல்லும் வரை

அது
என்னது?
எங்கிருந்து வந்தது?

- இஸுரு சாமர சோமவீர
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்நிழல் இதழ் 35 - ஜூலை 2012
# எதுவரை
# உயிர்மை
# திண்ணை

Friday, October 5, 2012

சினேகிதனொருவன்

சிநேகிதனொருவன் இருக்கிறான் எனக்கு
ஒரு பயனுமற்ற பொறுக்கியென
அனேகர் கூறும்படியான

அவ்வப்போது நள்ளிரவுகளில்
பயங்கரமான கனவொன்றைப் போல
உறக்கத்தைச் சிதைத்தபடி
வருவான் அவன் எனதறைக்கு

வடையொன்றை, கடலைச் சுருளொன்றை
எனது கையில் திணிக்குமவன்
வரண்ட உதடுகளை விரித்து
குழந்தைப் புன்னகையை எழுப்புவான்

உரையாடல்களை உடைக்கும் சொற்களோடு
சிவந்த விழிகளைச் சிறிதாக்கி
புரியாதவற்றை வினவுவான்
எனது தோள்களைப் பிடித்து
பதிலொன்றைக் கேட்டு
இரு விழிகளையும் ஊடுருவுவான்

அத்தோடு எனது தோள்மீது
அவனது தலையை வைத்து
கண்ணீர் சிந்துவான்

நிறுத்தும்படி கேட்கும்
எனது பேச்சைச் செவிமடுக்காது
ஒரு கணத்தில் இருளில்
புகுந்து காணாமல் போவான்

பகல்வேளைகளில் வழியில்
தற்செயலாகப் பார்க்க நேர்கையில்
தெரியாதவனொருவனைப் போல
என்னைத் தாண்டிச் செல்வான்

- இஸுரு சாமர சோமவீர
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்


நன்றி
# உயிர்நிழல் - இதழ் 35, ஜூலை 2012
# மலைகள் இலக்கிய இதழ்
# உயிர்மை
# திண்ணை 
# பதிவுகள் 

Sunday, September 9, 2012

பாற்சிப்பிகள்


சேகரிக்க வேண்டாம், கரையில் மின்னும்
மென்மையான பாற்சிப்பிகளை
உப்புச் சுவை மா கடலுக்கே அவை சொந்தமானவை
ஏன் தண்ணீரில் இறங்குவதில்லை
அச்சமா???

எண்ணிலடங்கா ரகசியங்கள் இல்லை கடலிடம்
இருப்பது ஒற்றைச் சிறு ரகசியமே…                                               
எல்லையில் வானும் கடலும்
இணையாதென்பது குறித்து நன்கறிந்தும்
ஏன் பொய்யான கனவுக் கவிதைகள்
கரையிலிருந்து கொண்டு கடல் குறித்து?

சேகரிக்க வேண்டாம் இப் பாற்சிப்பிகளை
கடலுக்குள் இறங்காமல்
கரையில் சுகமாக இருந்துகொண்டு…

- இஸுரு சாமர சோமவீர, 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# எதுவரை - இதழ் 04, ஆகஸ்ட் 2012
# உயிர்மை
# திண்ணை 

Friday, March 2, 2012

ஜப்பான் பேனா நண்பி

முன்னர் அவள் அனுப்பியவை
நீண்ட கடிதங்களுடன்
காய வைக்கப்பட்ட செர்ரி மொட்டுக்களும்
செக்கச் சிவந்த மேப்பிள் இலைகளும்

புகைப்படங்களில்
பனி நிறைந்த சோலைகளில்
ரோஸா நிறத்தில் மலர்ந்திருந்தாள்

அனைத்து மடல்களிலும்
ஆங்கில வகுப்பினைக் குறித்தும்
குளிர்தினங்களில்
நீச்சலை விரும்பாத குளத்தின்
தங்க மீன்களைப் பற்றியுமே
எழுதியிருந்தாள்

காலம் செல்லச் செல்ல தற்பொழுது
என்றாவது வருகிறது கடிதம்

அதே இடம்தான் இது
பெரிய கட்டிடத்தின் அடியில்
வீட்டுக் குருவிப் பார்வையோடு
அவளிருக்கும் இப் புகைப்படம்
இப்பொழுதுதான் வந்தது எனக்கு

நித்திரையேயில்லை இரவில்
புகைபிடிப்பதை நிறுத்த முடியவில்லை
என்ன செய்ய வேண்டும்?’
புகைப்படத்தின் பின்னால்
அவளது உடைந்த கையெழுத்து

மூலம் - இஸுரு சாமர சோமவீர
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# 'தாமரை' இலக்கிய இதழ் - ஜனவரி, 2012
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை

Wednesday, February 1, 2012

நான் வெளியேறுகையில்…


நான் வெளியேறுகையில்
என்னைத் தொடர்ந்து
புன்னகைத்தபடி
வருவதில்லை நீ வாசல்வரை
முன்பு போல

கட்டிலிலே சாய்ந்து
என்னையும் தாண்டி
கதவினூடாகப் பார்த்திருக்கிறாய்
தொலைதூரத்தை

அமைதியாக
பறக்கிறது பட்டம்
மிகத் தொலைவான உயரத்தில்
நூலிருக்கும் வரை

தெரியும் உனக்கும்
என்னை விடவும் நன்றாக

- இஸுரு சாமர சோமவீர
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்மை
# திண்ணை