Showing posts with label MAHESH MUNASINGHE. Show all posts
Showing posts with label MAHESH MUNASINGHE. Show all posts

Wednesday, November 1, 2017

அவர்கள் நம் அயல்மனிதர்கள் - 08 - எம்.ரிஷான் ஷெரீப்



     இலங்கையை ஆட்கொண்டிருந்த யுத்த மேகம் அகற்றப்பட்டு வருடங்களாகின்றன. போர் சூழ்ந்த தீவின் தேகம், நோய் நீங்கி படிப்படியாக ஆரோக்கியத்தின் பக்கம் மீண்டு கொண்டிருக்கிறது. பழைய காயங்களின் தழும்புகள் இப்பொழுதும் இருக்கின்றனதான். தேசத்தின் ஆயுட்காலம் முடிவதற்குள் அவற்றைக் காலம் ஆற்றியும், மாற்றியும் விடும். அடுத்தடுத்த தலைமுறைகள் நாட்டின் புது மினுமினுப்பிலும், பளபளப்பிலும் அமர்ந்து இலங்கையின் போர் வரலாற்றை பாடப் புத்தகங்களில் படித்துக் கொண்டிருக்கக் கூடும்.

     ஆனாலும், நாம் மறந்து விடக் கூடாத, மறந்து விட முடியாத போர் வீரர்கள் இரு தரப்பிலும் இருந்து கொண்டிருக்கிறார்கள். தமது மொழிக்காகவும், தமது மண்ணுக்காகவும், தமது மக்களுக்காகவும் தாம் கொண்ட இலட்சியத்துக்காகவும் எந்தப் பிரதிபலனையும் பாராது தமது உயிர், பலம், இளமை, ஆரோக்கியம் என அனைத்தையும் அர்ப்பணித்து யுத்தம் செய்தவர்கள் ஒரு புறம். வறுமை, வேலை வாய்ப்பின்மை, அரச உத்தியோகம், நல்ல வேதியம், சமூகத் தொண்டு, ஒரே தாய்நாடு போன்ற பல காரணங்களுக்காக அரசாங்கத்தோடு இணைந்து போராடியவர்கள் மறுபுறம்.

     இரு தரப்பினரையுமே போர் மிக ஆழமாகவும், மோசமாகவும் மென்றது. அதன் பற்களில் அகப்பட்டு உயிரோடு எஞ்சிய போர் வீரர்கள் பலரும் தம் வாழ்நாள் முழுவதும் அங்கவீனர்களாக வாழ விதிக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த மக்களது சௌபாக்கிய வாழ்க்கைக்காக தமது உயிரைக் கொடுத்துப் போராடினார்களோ அந்த வீரர்களது கண்ணீருக்கும், உயிர்களுக்கும், காயங்களுக்கும் மதிப்பற்றுப் போன ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

     இலங்கையின் பெருநகரங்களை விடவும், வறுமை சூழ்ந்த கிராமங்களிலிருந்து தமது வாழ்வாதாரத்துக்காக வேண்டி இராணுவத்தில் இணைந்து போரிட்ட இளைஞர்களே அதிகம். அவர்களுள் பலரும் இன்றும் கூட உடலின் பாகங்களை இழந்து ஊனமுற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதிகாரம் படைத்தவர்கள் கூட அவர்களைப் புறந் தள்ளிவிடும் உலகில், அவர்கள் வழிபடும் தெய்வங்கள் மாத்திரமே அவர்களை இன்னும் வாழ்க்கையில் நம்பிக்கை கொள்ளச் செய்து, வாழச் செய்து கொண்டிருக்கின்றன.

     அவ்வாறாக ஊனமுற்றுள்ள இராணுவ வீரனது ஒரு நாள் வாழ்வியலை எடுத்துச் சொல்கிறது கவிஞர் மஹேஷ் முணசிங்ஹவின் இக் கவிதை.

ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும்

முதியோர்
காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள் - வயதுவந்தோர்
பிணக்குவியல்களை
நிறைய நிறையக் கண்ணுற்றேன்


பாவங்களை ஊக்குவிக்கும்
துறவிகளின் உருவங்களைக் கண்டேன்
*பிரித் நூலும் கட்டப்பட்டது


'நாட்டைக் காக்கும்' எனக்கு காவல் கிட்டவென
பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து


விழி சதை இரத்தமென தானம் செய்து
உங்களிடம் வந்துள்ளேன்


ஆனாலும் புத்தரே
உங்களது பார்வை மகிமைமிக்கது


கிராமவாசிகளுக்கு மறந்துபோயிருக்கும்
மனைவி குழந்தைகளோடு
நலம் வேண்டிப் பாடும்
சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே
எனது தலையை ஊடுருவும்
உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்


கண்ணெதிரே தோன்றுகின்றனர்
என்னால் கொல்லப்பட்ட மனிதர்கள்
ஆங்காங்கே வீழ்ந்துகிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்


நூறு ஆயிரமென
நான் கொன்றொழித்திருப்பது
என்னையேதானா


பாளிச் செய்யுள்களை இசைக்கின்ற
சிறிய பிக்குகள்
பின்னாலிருந்து
நீங்கள் தரும் புன்முறுவல்
தென்படாதிருக்க இரு விழிகளையும் மூடிக்கொள்கிறேன்


கரங்கள் தென்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்
வணங்குவதற்குக் கூட உயர்த்தாமலிருக்கிறேன்

****

* பிரித் நூல் - பாதுகாவல் தேடி, புத்தரை வணங்கி, உடலில் கட்டப்படும் நேர்ச்சை நூல்.

     அரச கட்டளைக்கிணங்க தான், தேடித் தேடிக் கொன்றொழித்த தன் தேச மக்களது ஆத்மாக்கள், நினைவுகள் வழியாக அந்த இராணுவ வீரனை கணந்தோறும் துரத்திக் கொண்டேயிருக்கின்றன. அந்த ஞாபகங்கள் கொடியவை. யுத்தம் செய்து அங்கவீனத்தோடு மீண்டு வந்துள்ள ஒவ்வொரு போர்வீரனுக்குள்ளும் இவ்வாறான காயங்களுடனான பல ஞாபகங்கள் உள்ளன. அவை ஒரு போதும் ஆற்ற முடியாதவை.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com


நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்


Friday, October 1, 2010

இறுதி மணித்தியாலம்


கிலட்டின் தயாராகிறது
இறுதி உணவுபசாரத்துக்கும்
சூழ்ச்சி செய்யாமல்
தேர்ந்தெடுங்கள்
தேசியவாதிகளும் விடுதலை விரும்பிகளும்
எங்கள் துணிச்சல்மிக்கவர்களைப் பெயரிட்டுள்ளனர்

ராசாக்கள் தந்த சுகம்
மாளிகை அந்தப்புரம்
கை விட்டுப்போகுமென்ற நடுக்கத்தில்
தேசக் காதலர்கள் அழுகிறார்கள்
வெளிப்படையாகவே அவர்கள்
பகல் கொள்ளைக்காரர்கள்
ஊழல்காரர்கள் கொலைகாரர்கள்
சுரண்டிச் சாப்பிடுபவர்கள்

ரோசா நிறத்து விடுதலைவிரும்பிகள்
(சுய இருத்தலுக்கான)
உபாயமொன்றை
மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்
தேர்ந்தெடுத்த அனைத்தும் தவறானவை
பொருட்டின்றிக் கைவிடப்பட்ட
வலுவோடும் அன்போடும்
துயில்கின்றனர் பெருநிலத்தின் கீழே
வடக்கிலும் தெற்கிலும்
பல்லாயிரக் கணக்கில்
தொண்டைகிழிய
இரு கைகளுயர்த்திச் சொல்கிறார்கள்
அவர்களது தந்தையினதும் சகோதரனினதும்
அயலவனினதும் கொலைகாரர்கள்
எமது மீட்பர்கள்தானென

கனவுகளைக் காண்பவனும்
கனவுகளைக் கட்டியெழுப்புபவனும்
எம்முடனேயே மரித்துப்போகட்டுமென விதிக்கப்பட்டுள்ளது
இப்பொழுதே
கண்டங்களின் வேட்டைக்காரர்கள்
துணிச்சல்காரர்களை
விலைக்கு வாங்கிவிட்டனர்

மூலம் - மஹேஷ் முணசிங்ஹ 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 
இலங்கை

நன்றி
# உயிர்நிழல் இதழ் 32, ஏப்ரல் - ஜூன், 2010
# உயிர்மை
# திண்ணை

Thursday, September 2, 2010

ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும்

முதியோர்
காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள் - வயதுவந்தோர்
பிணக்குவியல்களை
நிறைய நிறையக் கண்ணுற்றேன்

பாவங்களை ஊக்குவிக்கும்
துறவிகளின் உருவங்களைக் கண்டேன்
*பிரித் நூலும் கட்டப்பட்டது

'நாட்டைக் காக்கும்' எனக்கு காவல் கிட்டவென
பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து

விழி சதை இரத்தமென தானம் செய்து
உங்களிடம் வந்துள்ளேன்

ஆனாலும் புத்தரே
உங்களது பார்வை மகிமை மிக்கது

கிராமவாசிகளுக்கு மறந்துபோயிருக்கும்
மனைவி குழந்தைகளோடு
நலம் வேண்டிப் பாடும்
சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே
எனது தலையை ஊடுருவும்
உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்

கண்ணெதிரே தோன்றுகின்றனர்
என்னால் கொல்லப்பட்ட மனிதர்கள்
ஆங்காங்கே வீழ்ந்து கிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்

நூறு ஆயிரமென
நான் கொன்றொழித்திருப்பது
என்னையேதானா

பாளிச் செய்யுள்களை இசைக்கின்ற
சிறிய பிக்குகள்
பின்னாலிருந்து
நீங்கள் தரும் புன்முறுவல்
தென்படாதிருக்க இரு விழிகளையும் மூடிக்கொள்கிறேன்

கரங்கள் தென்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்
வணங்குவதற்குக் கூட உயர்த்தாமலிருக்கிறேன்

* பிரித் நூல் - பாதுகாவல் தேடி, புத்தரை வணங்கி, உடலில் கட்டப்படும் நேர்ச்சை நூல்.

மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
         இலங்கை



நன்றி
# உயிர்நிழல் இதழ் - 32, ஏப்ரல் - ஜூன் 2010
# காலச்சுவடு இதழ் - 130, ஒக்டோபர் 2010
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை

Thursday, July 15, 2010

பிறக்காத கவிதை

("வன்னியில் மனிதாபிமான நடவடிக்கையின் போது கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட கர்ப்பிணித்தாயொருவரின் புகைப்படத்தைப் பார்த்ததால்")

கண்களைக் கூட திறக்காத
குருவிக் குஞ்சொன்று
தாயின் கர்ப்பத்துள்ளேயே
சதை வேடர்களுக்கு
இரையானது
வெடித்துத்
துண்டுகள் வேறாகிய
தொப்புள்க் கொடியின் மேலாக
எச்சில்படுத்தப்படாத இறகொன்று
இரத்தம் தோய்ந்து வெளிப்பட்டது

பச்சிளம் உதடுகளில்
கறப்பதற்குத் தளும்பிப் பார்த்திருந்த
முலைக்காம்புகள் ஊடாக
கண்ணீரையொத்த பாற்துளிகள் வழிந்தன
குருதியோடு குருதி கலந்து
தாய்ப்பாலால் நிறமடைந்து
பேசாத பெருநிலமும்
பெருமூச்செறிந்து
விம்மியழுதது கேட்டது

பிள்ளை கனவுகள் கண்டிருக்கும்
பாற்சிரிப்பு முகத்தில் பூத்திருக்கும்.
தாய் கனவுகள் வளர்த்திருப்பாள்
வெள்ளைச் சிரிப்பை மெல்லக் கேட்டிருப்பாள்.
வெறிபிடித்தவர்கள் வந்து
கனவுகளை வெடிக்கச் செய்திருக்கலாம்
தசைத்துண்டுகள் மீது
ஊறிக் கலைந்து சென்றிருக்கலாம்

உன்னைப் பலி கொண்ட காட்டுமிருகங்கள்
கொள்ளையடிக்கிறார்கள்
பிறந்த பூமியை.
மோப்பம் பிடிக்கிறார்கள்
நித்தமும் இரத்தச் சுவை வேட்டைகளை.
பிறந்திருந்தாலும்
வாழ்வொன்று எங்கே இருக்கும்
பறக்கின்ற வானத்தையும்
அவர்கள் எடுத்திருக்க

அழாமலே இருக்கிறேன்.
வன்னி அதிக தூரம் எனக்கு. பொறுத்திருக்கிறேன்.
அசையாத
பச்சிளம் இறகை நோக்கி
கனவொன்றில்
எனது கையினைக் கொண்டுசென்று
விரலைப் பற்றுமோ என
பார்த்திருக்கிறேன்

மூலம்: மஹேஷ் முணசிங்ஹ 2009 03 (சிங்களம்)
தமிழில் : ஃபஹீமாஜஹான்


நன்றி
# உயிர்நிழல் இதழ் 32, ஏப்ரல் - ஜூன், 2010

Friday, January 15, 2010

ஜனாதிபதித் தேர்தல் (வீரனைத் தேடும் போட்டி)



தின்றுகொண்டு
தின்றுகொண்டு
அவர்கள் ஒன்றாக
வரும்பொழுது
ஒருவாறு
தப்பித்த எனக்கு
கால்களை மேலே போட்டவாறு
இனி
பார்த்துக் கொண்டிருக்கலாம்
ஒருவன் மற்றவனைத்
தின்றுகொள்ளும் போது
குட்டை வால்
எஞ்சும் வரைக்கும்

மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
                    இலங்கை
நன்றி
# உயிர்மை
# இனியொரு
# நவீன விருட்சம்