Showing posts with label MARINA NEMAT. Show all posts
Showing posts with label MARINA NEMAT. Show all posts

Wednesday, July 27, 2016

சித்திரவதைச் சிறைப் பெண்ணின் உண்மைக் கதை

2005 ஆம் ஆண்டு வேனிற்பருவ காலத்தில் ஒரு மாலைநேர விருந்து வைபமொன்றின் போது நாம் ஒரு ஈரான் நாட்டுத் தம்பதியைச் சந்தித்தோம். நாம் மிகவும் மகிழ்ச்சியுடன் பல விடயங்களைக் கதைத்தோம். எமது அன்றாட செயற்பாடுகள் குறித்து, எமது தொழில்கள் குறித்து, பிள்ளைகளின் கல்வி குறித்து நாம் நிறையக் கதைத்தோம். நாம் முற்றத்தில் வைத்து இரவுணவை அருந்தினோம். இரவில் குளிர் அதிகரித்தபோது இனிப்புக்களை எடுப்பதற்காக நாம் ஹோட்டலின் உள்ளே சென்றோம்.

எமக்கு கோப்பி வழங்குகையில் பணிப்பெண் என்னுடன் கதைக்கத் தொடங்கினாள். அவள் என்னை நன்கறிவாள். எனது புத்தகம் எப்பொழுது வெளிவருகிறதென அவள் என்னிடம் வினவினாள். ஈரானியப் பெண்ணுக்கு எனது புத்தகத்தின் கதை சுவாரசியமானது. அவரது பெயர் ஃபரீஸா. புத்தகத்தைப் பற்றி அவர் என்னிடம் கேட்டார்.

"16 வயதில் சிறைக்குச் சென்ற நானொரு அரசியல் சிறைக் கைதி. எவீன் சிறைச்சாலை. நான் அந்த வாழ்க்கை பற்றி புத்தகமொன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன்" என்றேன்.

ஃபரீஸா கொஞ்ச நேரம் அமைதியாக எனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு மெதுவாகச் சொன்னார். "நானும் சில மாதங்கள் எவீன் சிறைச்சாலையில் இருந்தேன்."

எம்முடனிருந்த அனைவருமே அமைதியானார்கள். அனைவரும் எம்மிருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர். கடைசியில் பார்த்தால் நானும் ஃபரீஸாவும் எவீன் சிறைச்சாலையில் ஒரே காலப்பகுதியில்தான் இருந்திருக்கிறோம். இருபுறத்திலுள்ள இரு அறைகளில் இருந்திருக்கிறோம். எமதிருவரதும் வேதனை மிகுந்த ஞாபகங்களோடு எம்முடன் சிறையிலிருந்த தோழிகள் குறித்தும் கதைத்தோம்.

"எவருமே அவ்வாறான அனுபவங்களை வெளிப்படையாகக் கதைக்க விரும்ப மாட்டார்கள்" ஃபரீஸா கூறினார்.

"நானும் இருபது வருடங்களுக்குப் பிறகு அச் சம்பவங்களைப் பற்றி ஒருவருடன் கதைத்த முதல் சந்தர்ப்பம் இது."

நான் சிறையிலிருந்து விடுதலையானதன் பிற்பாடு எமது குடும்பத்தினர் அனைவரும் ஏதோ அவ்வாறான எதுவுமே நடக்கவில்லை என்பதைப் போல அவற்றை மறந்துவிட்டிருந்தனர். எவருமே சிறைச்சாலையைப் பற்றி ஞாபகப்படுத்தவில்லை. அங்கு என்ன நடந்தது எனக் கேட்கவுமில்லை. சிறைச்சாலை வாழ்க்கை பற்றிக் கதைப்பது எனக்கும் வேதனையாக இருந்தது.

சிறைக்குச் செல்ல முன்பு இருந்த அந்த அப்பாவிப் பெண்ணைக் காண்பதே எனது குடும்பத்தினருக்குத் தேவையாக இருந்தது. எனவே எவரும் எனது ஞாபகங்களைக் கிளறவில்லை. அவர்கள் அப் பயங்கரமான கடந்த காலத்தைப் புதைத்து விட்டனர்.

ஃபரீஸா என்னுடன் பல தடவைகள் தொலைபேசி மூலமாகக் கதைத்தார். நாம் எம்முடைய ஞாபகங்களை ஒருவரோடொருவர் பகிர்ந்து கொண்டோம்.

சில வாரங்களின் பின்னர் ஃபரீஸா என்னை அழைத்து அவ் வாழ்க்கை குறித்து இனிமேல் கதைக்க விரும்பவில்லை எனக் கூறினார். சுருக்கமாக அது குறித்து நினைவுகூரக் கூட விரும்பவில்லை என்றார்.

"என்னால் அந்த வேதனையை நினைவுபடுத்த முடியாது" என அழும் குரலில் அவர் கதைத்தார். நான் ஃபரீஸாவைப் புரிந்து கொண்டேன். வாதிடவில்லை. தான் என்ன செய்ய வேண்டுமென ஃபரீஸா தேர்ந்தெடுத்துள்ளார். நான் செய்யவேண்டியவை எனக்கு மீதமாக இருந்தது.

( தற்போது மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும், சித்திரவதைச் சிறையில் சிக்கிக் கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் உண்மைக் கதையான 'Prisoner of Tehran: a memoir' மரீனா நிமத்தின் சுயசரிதை நூலிலிருந்து ஒரு பகுதி )
- எம்.ரிஷான் ஷெரீப்