Showing posts with label KUMARI FERNANDO. Show all posts
Showing posts with label KUMARI FERNANDO. Show all posts
Saturday, September 22, 2012
கருப்பு விலைமகளொருத்தி
வளையல்களைத் தேர்ந்தெடுத்த இடத்தில்
நான் சந்தித்த விலைமகள்
மிகவும் அகங்காரத்துடனும்
அழகுடனும்
கருப்பாகவுமிருந்தாள்
காலையில் நாம் உணவுக்காகச் செல்லும்
உணவகத்தின் இன்னுமொரு மூலையில்
பீங்கான் நிறையச் சோறெடுத்து உண்பாள்
அவளது வயிறு மேடிட்டிருப்பதை
கதிரைகளுக்கிடையேயிருந்து கண்டேன்
கருவுற்றிருந்தாள்
பசியகன்றதும்
மரத்தடிக்குச் சென்றாள்
நாள்தோறும் சந்திக்க நேரும்
அவ் வதனத்தை
எவ்வாறு தாங்கிக்கொள்ள இயலும்
வங்கி முன்னாலிருக்கும்
ஒரேயொரு சிறு நிழல் மரம்
அவளது இருப்பிடம்
ஒருவர் மாத்திரமே இருக்க முடியுமான
அவ்விடத்திலமர்ந்து வயிற்றைத் தடவிக் கொண்டிருப்பாள்
இன்னும் சிறு குழந்தைகள் இருக்கக் கூடும்
இறுதி நாளில்
நான் விசாரித்தேன்
உணவக முகாமையாளரிடமிருந்து
சில தகவல்கள் கிடைத்தன
'ஆம். அவள் கருவை அழித்துக் கொண்டாள்
இப் பக்கத்து ஆட்களல்ல.'
கவலையோடு சேர்த்து கோபமும் எழுந்ததன்
காரணம் எனக்குத் தெரியும்
என்னால் அப் பெண்ணின் உள்ளத்தைப்
புரிந்துகொள்ள இயலாது
வயிறு நிறையச் சாப்பிட்டு
செய்வதறியாது
எழுந்து நடந்தேன்
- குமாரி பெர்னாந்து,
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# மலைகள் கலை, இலக்கிய இதழ்
# உயிர்மை
# ஊடறு
# திண்ணை
Subscribe to:
Posts (Atom)