Showing posts with label மகுடம். Show all posts
Showing posts with label மகுடம். Show all posts

Tuesday, July 16, 2013

அறுபதாம் தோட்டத்து மரண ஊர்வலம்


கரங்களைக் கோர்த்து இரு வரிசையில்
முகத்துக்கு முகம் பார்த்தபடி
ஏழெட்டு வீடுகளையேனும் ஒழுங்காகக்
கட்டிட முடியாத நிலமொன்றில்
நெருங்கியடித்துத் தம்மை நுழைத்துக் கொண்ட
அறுபது வீடுகள்

அவற்றின் மத்தியால் செல்லும்
முச்சக்கர வண்டியொன்றேனும் பயணித்திட முடியாத
குறுகிய ஒழுங்கையின் இருமருங்கிலும்
இரண்டு வரிசைகளில் போடப்பட்டுள்ளன
ப்ளாஸ்டிக் கதிரைகள்

ஒரே விதமாகத் திறந்தே கிடக்கின்றன
எல்லா வீடுகளின் யன்னல்களும் கதவுகளும்

அமர்ந்திருக்கின்றனர் எல்லா வீட்டு முற்றங்களிலும்
வருபவர்கள் எல்லோரும்

அறுபதாம் தோட்டத்தில் வசித்த மூத்த குடியவள்
எவர்க்குப் பசியெனினும் உண்ண உணவு கொடுத்து
எல்லோரது துயரத்துக்கும் ஒன்றுபோலவே செவிமடுத்தவள்
முழு அறுபதாம் தோட்டத்துக்கும்
அம்மா அவள்
பாட்டியவள்

எண்பத்தைந்து வருடங்களாக
துயரத்தை மட்டுமே அனுபவித்திருந்தாலும்
விழிகளிலிருந்து ஒரு துளிக் கண்ணீர் வழியவிடாது
எந்த நோய் நொடியும் தீண்டிடாது
ஒரு மலை, ஒரு பெருவிருட்சம் போன்றிருந்த
"ரத்து மார்கரெட் நோனா"
வீட்டுக்குள்ளே வந்துபோகும்
எவர் குறித்தும் அக்கறையற்று
சிறிய வரவேற்பறையின் மத்தியில்
மாமரப் பலகையால் செய்த
பெட்டியில் உறங்குகிறாள்
தன் பாட்டில் சுதந்திரமாக

ஓரிடத்திலிருந்து
மாஜரீன் பூசப்பட்ட பாண்துண்டுகளைக் கொண்டு வருகையில்
மற்றோர் இடத்திலிருந்து கொண்டுவருவர்
தேனீரையும் பிஸ்கட்டையும்

ஒரே வீடு ஒரே குடும்பமென
எல்லா விழிகளிலும் கண்ணீரேந்தி
ஒன்றாக எல்லோருமே விழித்திருப்பார்கள்
இன்று  அறுபதாம் தோட்டத்தில்

மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழி மூலம்)
தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்

நன்றி
# மகுடம் - கலை இலக்கிய இதழ் 04
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை
# பதிவுகள்

Wednesday, June 5, 2013

மட்டக்களப்பில் வைத்து...

தென்றல் வீச மறந்த கணப் பொழுதில்…

களப்பில் எப்போதேனும் அலையெழும்.
வேதனை மிகுந்த மீனொன்று மேலெழுந்து
நெஞ்சில் அடித்தழுது
தடதடவென்று செட்டைகளை அசைத்து
வாலால் நடந்தபடி தன் துயரத்தைச் சத்தமிட்டரற்றி
நீரில் வீழ்ந்து மறைந்து போகும் – அதுவும்
உறுதியான கணமொன்றில் மாத்திரமே

 தூரக் கரைதனில் நெளியும் எல்லா ஒளிப் புள்ளிகளும்
களப்பு நீரில் நீண்ட தம் வெளிச்ச ரேகைகளை வரையும்.

கல்லடிப்பாலம்
அரண் போல உயர்ந்து எழுந்தாலும்
தன் தலை கவிழ்ந்து விழி புதைத்து
புன்னகைக்க மறந்து துயர் தாங்கும்
ஓர் தந்தையைப் போல

சிந்தனை மறந்த வாகனங்கள்
பாலத்தை அவசரமாய்க் கடந்து செல்லும்
அர்த்தமற்ற தம் வெளிச்சங்களை
களப்பின் மீது நீண்ட கோடுகளாய்த் தீட்டி

இந்தக் களப்பு அம்மாவைப் போன்றது.
ஆழ்ந்த விழிகளால் மெளனித்து
எல்லாத் துயரங்களையும் தாங்கும்
முகத்தில் அலையெழுப்பும் தென்றலுக்குப் புன்னகைக்கும்
எல்லா ஒளிக்கோடுகளையும் கலக்கும் இணைக்கும்
களப்பின் மார்பு அலைகளையும் சுழிகளையும் உயிர்ப்பிக்கும்.

புத்தரின் நினைவெழும் நிக்கினி போயா கூட – வெறும்
சுண்ணாம்பாய்க் களத்தினுள் கரைகிறது,
புத்தபிரான் சொர்க்கம் நுழைந்த பினர பௌர்ணமியும் – கடும்
இருளாயே இங்கு விடிகிறது.

வசந்தம் உதயமானாலும் உதிக்க மறக்கிறதா சூரியன்?
இது கிழக்கு!

- மஞ்சுள வெடிவர்தன
தமிழில் – ஃபஹீமாஜஹான்


நன்றி
# மகுடம் இதழ் - 03
# எதுவரை
# திண்ணை

Monday, April 1, 2013

சித்தண்டி கண்ணீர்

(மட்டக்களப்பு சித்தாண்டியில், திகிலி வெட்டை அரச பாடசாலையில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் ஒன்பது வயது சிறுமியொருத்தி மூன்று இராணுவ வீரர்களினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டாள். அதனை எதிர்த்த ஊர்வாசியொருவரின் உயிரற்ற சடலம் மறுநாள் தடாகமொன்றிலிருந்து கிடைத்தது.)


திகிலி வெட்டை குளமதில் பூத்த தாமரையொன்றில்
உதிர்ந்த இதழ்களிடையே சிங்கத்தின் உரோமங்கள் சிக்கிக் கிடந்தன
தாமரையில் கண்ணீர் தேங்கியிருந்தது
அது இருளில் கிடந்த
ஆயிரக்கணக்கான விழிகளைத் திறக்கச் செய்தது

கிழக்கில்  உதயமாகிச்  சூரியனும்  உச்சிக்கு வந்தது
ஒளி வழங்காத சூரியனிடமிருந்து இருளே கசிந்தது
வெள்ளை நிற மல்லிகை மொட்டொன்று இருளில் தனித்துப் போனது
மெல்லிய புகைபோன்று சூரியன் கசிந்து கொண்டிருந்தது

வாளினை ஏந்திச் சிங்கம் கொடிதனில் அசைந்தாடியது
இலிங்கத்தை ஏந்தியபடி இராணுவம் எங்கும் அலைந்தது
மல்லிகை மொட்டொன்றை நடுவீதியில் சிதைத்தது
கீதம் பாடும் மீனொன்றை வதைத்துக் கொன்றது

அரசனோ இளவரசனோ ஒப்புதல் தந்தது
அத்துனை எளிதாயிற்றா மகளை சிங்கத்துக்குக் கொடுத்தது
தங்க விதைகளையா இனியும் தேடுவது
சிங்கங்களே இனி உங்களை நாய்களென்றா அழைப்பது

தாய்ப்பால் வாசனை மறவாத அழகிய பூவொன்றுக்கு
தான் விளையாடித் திரியும் ஊர்மனை தொலைதூர இடமில்லை
தாய்நாட்டைக் காக்கும் வீரர்கள் இருக்கும் பாதையில்
செளபாக்கியமெங்கே சுவாசிக்கக் கூட முடியவில்லை

புற்பூண்டிழந்து போய்க் கிடக்கின்றது சித்தண்டி - அங்கே
மனமெங்கும் வியாபித்திருந்த விஷத்தை மட்டுமா கொட்டினீர்கள்
வாய் திறந்தாலே தர்ம போதனைகளை உரைக்கின்றவர்களே
இந்த நரகக் கிடங்கு உங்களுக்கு அழகாகத் தெரிகிறதா

மூலம்மஞ்சுள வெடிவர்தன
தமிழில்ஃபஹீமாஜஹான்

நன்றி
# மகுடம் இலக்கிய இதழ் - 03
# எதுவரை இலக்கிய இதழ் - மார்ச், 2013
# ஓவியர் நளீம்.