Monday, November 10, 2014

இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது



கன்னத்துக்கு நீயளித்த அறையின் வீச்சில்
உடைந்து தெறித்தது மலையின் சிரசு
இடையறாது குருதியோடும் சதுப்பு நிலமாய் இதயம்
புதைந்தது குளிர்ந்த பள்ளத்தாக்கினிடையே

அருளும் பாதுகாப்பும் தரும்படி நாம்
உருவச் சிலைகளுக்கு மலர் வைக்கும்போதும்
நேசித்த மலை பற்றியே முணுமுணுத்தோம்

தென்னோலைக் கூரையினூடே தென்படும் வானத்தை நோக்கி
வசந்தங்களைக் கேட்டபோதும்
உழைத்துத் தேயும் கரங்களுக்குக் கிடைக்காது ஒருபோதும்
எனவே இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது
உறங்குகிறேன் மண்ணின் கீழே வழமைபோலவே

- ஷஸிகா அமாலி முணசிங்க
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

குறிப்பு - அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும் !

நன்றி
# வல்லமை
# ஊடறு
# இனியொரு
# பதிவுகள்
# நவீன விருட்சம்

Wednesday, October 8, 2014

திலீபன்



புன்னகைக்கும் இதயம்
கண்ணீர்த் துளியைப் பற்றிக் கொள்ளும்
அழத் தோன்றும் முகத் தோற்றம்
நேசத்தை யாசிக்கும்
யதார்த்தத்தைக் கனவோடு பிணைத்து
இலக்குகளுக்காகத் தரித்து நின்ற திலீபன் !
திலீபன் ! காற்றில் உதித்தவன் !

நெஞ்சங்களில்
அநேகமானவற்றை விட்டுச் சென்ற
முற்றுப் புள்ளிகளுடனான நிலத்தில்
ஒரு 'கமா'வாக மறைந்த
விலைமதிப்பற்ற யௌவனத்தை
கோரிக்கைகளுக்காக ஈடு வைத்த
நேர்மையான புன்னகையும்
தாயன்பின் மிருதுவான குணமும் கொண்டவன்

அன்றிலிருந்து இன்று வரை
கண்ணீர் ருசிக்கும் அன்னையர்
கைகளிலில்லா ஐவிரல்களையும்
தேடியலையும் தந்தையர்
ஒன்றின் மீதொன்றாக அடுக்கப்பட்டிருக்கும்
புதல்வர்களின் சடலங்களின் மீது
ஓலமிட்டழுபவர்கள்
எல்லா இடங்களிலிலும்
இருக்கிறார்கள் திலீபன்

எரியும் விளக்கின் சுடரின்
கதைகளைக் கேட்கும் இருளும்
'பொறுமையை மாத்திரமே கைக்கொள்வோம்'
என்றே முனகும்
உருவாக்கப்பட்ட நாடகக் கோமாளிகள்
விலகிச் செல்லும் கூடமும்
'உண்ணாவிரதம் இருப்பது
எப்படியெனக் காட்டுகிறேன்' எனக் கூறி
மீண்டும் திலீபனுடன் அமைதியாகும்

நல்லூர் வானம் எனப்படுவது
வெடிப்புற்ற பூமியென அறிந்து
சூரிய, சந்திரர்களை விடவும்
கருமுகில்கள் அணி திரளும்
வாழ்க்கையில் சிறந்தவற்றை
கோணலாகிய தினங்களிடையே ஒளித்து
சுவாசத்தை உடைத்துடைத்துப் பகிர்ந்து
இதயத் துடிப்பு உறைந்ததோ திலீபன் அண்ணா...

- கசுன் மஹேந்திர ஹீனடிகல

தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
#  இனியொரு இதழ்
#  வல்லமை இதழ்

Thursday, August 14, 2014

மில்லியன் மக்கள் பேரணிக் கவிதை

குறிப்பு - அமெரிக்காவில் வசித்த பத்து இலட்சத்துக்கும் அதிகமான கறுப்பினத்தவர்கள் வாஷிங்டன் டீ.சி.யில் ஒன்று கூடி தமது உரிமைகள், ஒற்றுமை மற்றும் தமது குடும்பங்களின் பெறுமதி ஆகியவற்றை முன்னிறுத்த ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் பேரணியே 'Million Man March' என அழைக்கப்படுகிறது. 1995.10.16 ஆம் திகதி இடம்பெற்ற பேரணியானது, அமெரிக்க வரலாற்றிலேயே அதுவரை நடைபெற்றிருந்த மக்கள் ஒன்றுகூடல்களிலும் பார்க்க, விசாலமானதாக அமைந்திருந்தது. 


இரவு நீண்டிருக்கிறது
காயம் ஆழமானதாயிருக்கிறது
இருண்டிருக்கிறது பள்ளம் - அதன்
சுவர்கள் செங்குத்தானவை

தொலைதூர சமுத்திரக் கரைதனில்
மரித்துப் போன நீல ஆகாயத்தின் கீழ்
நீங்கள் எட்ட இயலாத் தொலைவில்
கூந்தலால் பிடிக்கப்பட்டு நான் இழுத்துச் செல்லப்படுகிறேன்
உங்கள் கைகள் பிணைக்கப்பட்டிருந்தன
உங்கள் வாய்கள் கட்டப்பட்டிருந்தன
குறைந்தபட்சம் உங்களால்
எனது பெயர் கூறி அழைக்கக் கூட
இடமளிக்கப்படவில்லை
எந்தவொரு ஆதரவுமற்ற நீங்களும்
என்னைப் போலவே
ஆனால் துரதிர்ஷ்டவசமாக
வரலாறு முழுவதும் நீங்கள்
அவமானம் எனும் அடையாளத்தைச் சுமந்தபடி

மீண்டும் சொல்கிறேன்
இரவு நீண்டிருக்கிறது
காயம் ஆழமானதாயிருக்கிறது
இருண்டிருக்கிறது பள்ளம் - அதன்
சுவர்கள் செங்குத்தானவை

ஆனாலும் இன்று
புராதன ஆத்மாக்களின் ஒலி எழுகிறது
நூற்றாண்டுகளையும் வருடங்களையும் கடந்து
சமுத்திரங்களையும் கடல்களையும் தாண்டி
ஆழமான வார்த்தைகளால் எம்மிடம் உரைக்கின்றன
'ஒன்றாயிணைந்து இனத்தைக் காப்பாற்றுங்கள்
தொலைதூர இடமொன்றில் விடுதலை வேண்டி நீங்கள்
ஏற்கெனவே இழப்பீட்டைச் செலுத்தி விட்டீர்கள்'

எமது அடிமைச் சங்கிலிகள்
விடுதலை வேண்டி மீண்டும் மீண்டும்
தம் இழப்பீட்டைச் செலுத்தியதை
அவை நினைவுபடுத்துகின்றன

இரவு நீண்டிருக்கிறது
காயம் ஆழமானதாயிருக்கிறது
இருண்டிருக்கிறது பள்ளம் - அதன்
சுவர்கள் செங்குத்தானவை

நாம் வாழ்ந்த,
இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும்
நரகமானது,
எமது புலன்களைக் கூர்மைப்படுத்தியிருக்கிறது
எமது இலக்குகளை இறுக்கமாக்கியிருக்கிறது

இரவு நீண்டிருக்கிறது
இன்று காலை உங்கள் வேதனைகளினூடு
உங்கள் ஆன்மாக்களை எட்டிப் பார்த்தேன்
ஒருவரோடு ஒருவர் நம்மை நாமே
பூரணப்படுத்திக் கொள்ளலாமென நானறிவேன்

உங்கள் நிலைப்பாட்டினூடும் மறைந்த மாறுவேடத்தினூடும்
நான் பார்த்தேன்
உங்கள் கபிலநிற விழிகளில் தேங்கியிருந்த
உங்கள் குடும்பம் மீதுள்ள நேசத்தை நான் கண்டேன்

நான் கூறுகிறேன் கை தட்டுங்கள்
இணைந்துகொள்வோம் இச் சந்திப்பு மைதானத்தில்

நான் கூறுகிறேன் கை தட்டுங்கள்
பழகிக் கொள்வோம் ஒருவரோடொருவர் நேசத்தோடு

நான் கூறுகிறேன் கை தட்டுங்கள்
ஒன்றாய் எழுவோம் தாழ்ந்த பாதையினூடு

கை தட்டுங்கள் ஒன்றாக வந்து
வெளிப்படுத்துவோம் எம் இதயங்களை

ஒன்றாயிணைந்து வருவோம்
எமது மனநிலைகளை மாற்றியமைக்க

ஒன்றாயிணைந்து வருவோம்
எமது ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்த

கை தட்டுங்கள் இறுமாப்புக்களைக் களைந்து
எம் வரலாற்றைத் திரிபுபடுத்துவதை நிறுத்துவோம்

கை தட்டுங்கள்
ஓரங்கட்டப்பட்ட ஆன்மாக்களை அழைப்போம்

கை தட்டுங்கள்
வரவேற்போம் நாம்
எமது உரையாடல்களில் மகிழ்ச்சியை
எமது படுக்கையறைகளில் மரியாதையை
எமது சமையலறைகளில் கருணையை
எமது முன்பள்ளிகளில் பாதுகாப்பை

மூதாதையர் நினைவுருத்துகின்றனர்
வரலாறானது வேதனை மிக்கதெனினும்
நாம் முன்னே செல்லும் வழித்தோன்றல்களென்பதையும்
மீண்டும் எழும் மனிதர்களென்பதையும்

நாங்கள் எழுவோம்
மீண்டும் மீண்டும் !

- மாயா ஏஞ்சலோ  
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்


மாயா ஏஞ்சலோ (1928 - 2014) :

            1928 ஆம் ஆண்டு கறுப்பின அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்த மாயா ஏஞ்சலோ (மாகிரட் ஆன் ஜான்சன்), வட கரோலினாவிலுள்ள தனது வீட்டில் இருதய நோயின் காரணமாக, கடந்த மே 26 ஆம் திகதி, தனது 86 வயதில் காலமானார். சிறு வயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட இவர், தனது எட்டு வயதில் தாயாரின் காதலனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட காரணத்தால் அதிர்ச்சியில் பேசும் திறனிழந்து பல வருடங்களை துயரத்தோடு கழித்தவர். வறுமையினாலும், இனப்பாகுபாட்டின் காரணத்தாலும் பல துயரங்களை அனுபவித்தவர். எழுதுவதோடு நிற்காமல், நடைமுறை வாழ்க்கையில் சிறந்த முறையில் சாதித்துக் காட்டியவர் இவர்.

            தனது வாழ்நாள் முழுவதும் காத்திரமானதும், பிரபலமானதுமான பல கவிதைகளை எழுதியுள்ள இவர், திரைப்படத் துறையிலும் பணி புரிந்திருக்கிறார். ஆறிற்கும் அதிகமான மொழிகளில் தேர்ச்சி கண்ட இவர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளதோடு, எகிப்து, கானா நாட்டுப் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் கற்றில்லாத போதிலும் கூட, உலகம் முழுவதிலுமுள்ள முப்பதிற்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கி கௌரவித்திருக்கின்றன.
  
நன்றி
# அம்ருதா இதழ், ஜுலை - 2014
# பதிவுகள் இதழ்
# இனியொரு இதழ்
# காற்றுவெளி இதழ்