Showing posts with label A.SHANKAREE. Show all posts
Showing posts with label A.SHANKAREE. Show all posts

Tuesday, December 15, 2009

இப்பொழுது நான் வளர்ந்த பெண்




நான் மலராக இருந்தேன். இப்பொழுது கல்.
நான் காற்றைப் போல திரிந்தேன்
இப்பொழுது தேங்கிய நீரோடை போல அமைதியானேன்
தண்ணீரைப் போல பாய்ந்தோடினேன்
இப்பொழுது பனிக்கட்டி போல உறைந்துபோனேன்

பூவாய், காற்றாய், நீராய் இருந்த காலத்தில்
சுதந்திரமாய் ஓடினேன் - பாய்ந்தேன்
கை கால் சுழற்றினேன்
கத்தி அழுதேன் அடித்தொண்டையால்
ஓங்காரமிட்டுச் சிரித்தேன்.
யாரும் அவற்றை நிறுத்தவில்லை
புத்தகங்களைக் கிழித்துப் போட்டேன் கோபம் வந்தவேளைகளில்

அவ்வாறு சுதந்திரம் இருந்த சமயத்தில்
மரங்களேறி மாங்காய் பறிக்க முடியுமாக இருந்தது
அயல்வீட்டுப் பையன்களோடு
நொண்டியபடி பாண்டி ஆடி
ஒளிந்து விளையாடினேன்
அவை குறித்து யாரும் தவறாகப் பேசவில்லை

ஆனால் இன்று?
நான் வளர்ந்த பெண்
சத்தமாகச் சிரிப்பது நல்லதல்ல!
ஓடுதல், பாய்தல் தீயது
ஓசையெழக் கதைப்பது தடுக்கப்பட்டது.
நான் விரிக்கப்பட்ட புகையிலை போன்றவள்
(பொம்பளை சிரிச்சால் போச்சு.
புகையிலை விரிச்சால் போச்சு !)

அமைதி, பொறுமை, பனித்துளி போன்ற தூய்மை
எனக்கு வழங்கப்பட்டுள்ள ஆபரணங்கள்
பேச்சு, சிரிப்பு, பயணம், ஆடைகள்
கண்ணியமாக இருக்க வேண்டியவை
செய்யவேண்டியவை எல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன
நான் கல் - உறைந்த பனி
ஆனால் நான் வளர்ந்த பெண்

மூலம் - ஏ.ஷங்கரீ (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.



நன்றி
# உயிர்மை