Showing posts with label JAYANTHA KALUPAHANA. Show all posts
Showing posts with label JAYANTHA KALUPAHANA. Show all posts

Sunday, December 5, 2010

மரித்தோரின் திருநாளில்...

இன்று உயிர் நீத்தோர் தினம்
என்னை நினைத்து நீ
கதறும் அழுகையின் ஓசையும்
எனக்குக் கேட்டது

நீ அழுததைப் போலவே
வானம் அழுதது
மின்னல் வெட்டி வெட்டி
பூமியை அதிர வைத்து அதிர வைத்து
துயரம் சொன்னது
வெண்முத்துக் குடை பிடித்து
நான் நடந்து போனேன்

நாங்கள் நடந்துபோன சாலையில்
உன் பாதச்சுவடு தேடினேன்
இரயில் நிலையப் பாலத்தின்
ஈரப்பாசி படிந்த
படிக்கட்டுகளின் மேல்

திருவாணைக் கல்லிருக்கும்
ஒற்றையடிப்பாதையில் நடந்துசென்று
நான்...
எனது கல்லறையருகில்
முழந்தாளிட்டேன்
விடையளிக்கும் பூச்செண்டை வைத்தேன்

எனதே எனதான விழிநீர்த் துளி
எனது கல்லறையின் மீதே
வீழ்ந்து சிதறியது
குளிர் மழைத்துளி போல

'ஐயோ அவனிருந்திருந்தால்
இந்த உலகம் முழுதும்
என்னைப் பற்றி
காதலுடன் கவிதை எண்ணங்களை
விதைத்திருப்பான்
தாரகைத் துண்டுகளைப் போல'

நீ அழும் ஓசை
எதிரொலிக்கிறது
விம்மலுடன்

அன்பான மனைவியான
உன் துயரம்
வெகு தொலைவிலிருந்து கேட்கிறது
சோக கீதத்தின் தாளத்துடன்

மூலம் - ஜயந்த களுபஹன
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 

இலங்கை

நன்றி

# காலச்சுவடு இதழ் - 130, அக்டோபர் 2010
# உயிர்மை
# திண்ணை
# ஓவியர் ரவி