Wednesday, June 5, 2013

மட்டக்களப்பில் வைத்து...

தென்றல் வீச மறந்த கணப் பொழுதில்…

களப்பில் எப்போதேனும் அலையெழும்.
வேதனை மிகுந்த மீனொன்று மேலெழுந்து
நெஞ்சில் அடித்தழுது
தடதடவென்று செட்டைகளை அசைத்து
வாலால் நடந்தபடி தன் துயரத்தைச் சத்தமிட்டரற்றி
நீரில் வீழ்ந்து மறைந்து போகும் – அதுவும்
உறுதியான கணமொன்றில் மாத்திரமே

 தூரக் கரைதனில் நெளியும் எல்லா ஒளிப் புள்ளிகளும்
களப்பு நீரில் நீண்ட தம் வெளிச்ச ரேகைகளை வரையும்.

கல்லடிப்பாலம்
அரண் போல உயர்ந்து எழுந்தாலும்
தன் தலை கவிழ்ந்து விழி புதைத்து
புன்னகைக்க மறந்து துயர் தாங்கும்
ஓர் தந்தையைப் போல

சிந்தனை மறந்த வாகனங்கள்
பாலத்தை அவசரமாய்க் கடந்து செல்லும்
அர்த்தமற்ற தம் வெளிச்சங்களை
களப்பின் மீது நீண்ட கோடுகளாய்த் தீட்டி

இந்தக் களப்பு அம்மாவைப் போன்றது.
ஆழ்ந்த விழிகளால் மெளனித்து
எல்லாத் துயரங்களையும் தாங்கும்
முகத்தில் அலையெழுப்பும் தென்றலுக்குப் புன்னகைக்கும்
எல்லா ஒளிக்கோடுகளையும் கலக்கும் இணைக்கும்
களப்பின் மார்பு அலைகளையும் சுழிகளையும் உயிர்ப்பிக்கும்.

புத்தரின் நினைவெழும் நிக்கினி போயா கூட – வெறும்
சுண்ணாம்பாய்க் களத்தினுள் கரைகிறது,
புத்தபிரான் சொர்க்கம் நுழைந்த பினர பௌர்ணமியும் – கடும்
இருளாயே இங்கு விடிகிறது.

வசந்தம் உதயமானாலும் உதிக்க மறக்கிறதா சூரியன்?
இது கிழக்கு!

- மஞ்சுள வெடிவர்தன
தமிழில் – ஃபஹீமாஜஹான்


நன்றி
# மகுடம் இதழ் - 03
# எதுவரை
# திண்ணை

Wednesday, May 1, 2013

நவீன தோட்டிகள்


'இங்கும் அதே தமிழன்தான்
அங்கும் இதே தமிழன்தான்'
கூரிய பார்வைகளும்
குற்றச்சாட்டுகளும்
குத்தும் ஊசிமுனைகளும்
முடிவற்றவை

தலைக்கு மேலே சூரியனும்
நோயுற்ற தீக் காற்றும்
கொதிக்கச் செய்கிறது குருதியை.
பரம்பரை வழித் திண்ணையும்
செந்தணலாய்ச் சுடுகிறது

காகங்கள் வரிசையாக எச்சமிடுகின்றன
எச்சங்களை விற்றும் பிழைப்பவர்கள்
'இங்கும் அதே தமிழன்தான்
அங்கும் இதே தமிழன்தான்'
என்கின்றனர்

- விஜய நந்தன பெரேரா
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

Monday, April 1, 2013

சித்தண்டி கண்ணீர்

(மட்டக்களப்பு சித்தாண்டியில், திகிலி வெட்டை அரச பாடசாலையில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் ஒன்பது வயது சிறுமியொருத்தி மூன்று இராணுவ வீரர்களினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டாள். அதனை எதிர்த்த ஊர்வாசியொருவரின் உயிரற்ற சடலம் மறுநாள் தடாகமொன்றிலிருந்து கிடைத்தது.)


திகிலி வெட்டை குளமதில் பூத்த தாமரையொன்றில்
உதிர்ந்த இதழ்களிடையே சிங்கத்தின் உரோமங்கள் சிக்கிக் கிடந்தன
தாமரையில் கண்ணீர் தேங்கியிருந்தது
அது இருளில் கிடந்த
ஆயிரக்கணக்கான விழிகளைத் திறக்கச் செய்தது

கிழக்கில்  உதயமாகிச்  சூரியனும்  உச்சிக்கு வந்தது
ஒளி வழங்காத சூரியனிடமிருந்து இருளே கசிந்தது
வெள்ளை நிற மல்லிகை மொட்டொன்று இருளில் தனித்துப் போனது
மெல்லிய புகைபோன்று சூரியன் கசிந்து கொண்டிருந்தது

வாளினை ஏந்திச் சிங்கம் கொடிதனில் அசைந்தாடியது
இலிங்கத்தை ஏந்தியபடி இராணுவம் எங்கும் அலைந்தது
மல்லிகை மொட்டொன்றை நடுவீதியில் சிதைத்தது
கீதம் பாடும் மீனொன்றை வதைத்துக் கொன்றது

அரசனோ இளவரசனோ ஒப்புதல் தந்தது
அத்துனை எளிதாயிற்றா மகளை சிங்கத்துக்குக் கொடுத்தது
தங்க விதைகளையா இனியும் தேடுவது
சிங்கங்களே இனி உங்களை நாய்களென்றா அழைப்பது

தாய்ப்பால் வாசனை மறவாத அழகிய பூவொன்றுக்கு
தான் விளையாடித் திரியும் ஊர்மனை தொலைதூர இடமில்லை
தாய்நாட்டைக் காக்கும் வீரர்கள் இருக்கும் பாதையில்
செளபாக்கியமெங்கே சுவாசிக்கக் கூட முடியவில்லை

புற்பூண்டிழந்து போய்க் கிடக்கின்றது சித்தண்டி - அங்கே
மனமெங்கும் வியாபித்திருந்த விஷத்தை மட்டுமா கொட்டினீர்கள்
வாய் திறந்தாலே தர்ம போதனைகளை உரைக்கின்றவர்களே
இந்த நரகக் கிடங்கு உங்களுக்கு அழகாகத் தெரிகிறதா

மூலம்மஞ்சுள வெடிவர்தன
தமிழில்ஃபஹீமாஜஹான்

நன்றி
# மகுடம் இலக்கிய இதழ் - 03
# எதுவரை இலக்கிய இதழ் - மார்ச், 2013
# ஓவியர் நளீம்.