Wednesday, January 20, 2010

மரித்த உயிரை மீளப்பெறும் முறை



    'செத்துப் போன உயிரொன்றை மீண்டும் பெற்றுத் தரக் கூடிய மருந்து என்ன?'

என ஒரு நாள், கொல்லனொருவன் வைத்தியரைக் கேட்டான். வைத்தியர் புன்னகைத்து,

    'செத்துப் போன உயிரை மீண்டும் பெற்றுத் தரக்கூடிய எந்தவொரு மருந்தும் இந்த உலகத்தில் இல்லை' என பதிலளித்தார்.

    ' அப்படியென்றால், செத்துப் போன உயிரை மீட்டுத் தர முடியுமான ஒருவன் உலகத்தில் இருக்கிறானா?'

    ' அப்படியொருவன் இருப்பானென்றும் நான் நினைக்கவில்லை'

    ' அப்படிப்பட்ட ஒருவனை எனக்குத் தெரியும்'

    ' அவன் யார்?'

    ' கொல்லன்'

    ' எப்படி உன்னால் இறந்த உயிரை மீளக் கொடுக்க முடியும்?'

    ' உருக்குகளுக்கு உயிர் போனவிடத்து என்னால் உயிர் கொடுக்கமுடியும்'

    ' ஆமாம். அது சரி. நீ சொல்வது உருக்குகளைப் பற்றி. நான் மனிதர்களை நினைத்துப் பார்த்தேன்'

    ' மனிதர்களுக்கும் அவ்வாறேதான்'

மீண்டும் புன்னகைத்தார் வைத்தியர்.

    ' உருக்குகளுக்கு நடப்பவையெல்லாம் மனிதர்களுக்கு நடக்குமென்றால், உயிர் போவதல்லாமல் உயிர் கிடைக்குமா?'

    ' அது எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று தெரியும். அதாவது உருக்குகளுக்கு நடக்கும் அனைத்து அழுத்தங்களும் எனக்கும் நிகழ்வதோடு, எனது கை,கால்களும் உருக்குகளைப் போலவே பலம் வாய்ந்தது என்பது தெரியும்'

    'அவ்வாறெனில், அங்கு நடப்பவற்றைப் பார்வையிட நான் விரும்புகிறேன்'

    ' சரி. எனது பட்டறைக்கு வாருங்கள்'

    பிறகொரு நாள் கொல்லன் தனது பட்டறையில் இரும்பினை நெருப்பிலிட்டு உருக்கிக் கொண்டிருக்கும்பொழுது, அவ் வைத்தியர் அங்கு வந்தார். கொல்லன், ஆயுதங்களை நெருப்பிலிட்டு, காய்ச்சுவதைப் பார்த்துக் கொண்டிருந்த வைத்தியர், தன்னையறியாமல் கேட்டார்.

    ' நெருப்பினால் ஆயுதங்களுக்கு உயிர் கிடைப்பதென்பது ஆச்சரியம் தருகிறது. இல்லையா?'

அதற்கு எந்தப் பதிலும் அளிக்காத கொல்லன், அவ் ஆயுதங்களைத் தட்டுதல், தகர்த்தல் போன்றவற்றைச் செய்தான்.

    ' ஆயுதங்களுக்கு உயிர் கொடுப்பது நெருப்பு இல்லையா?' என வைத்தியர் மீண்டும் கேட்டார்.

    ' இல்லை' எனச் சொன்ன கொல்லன், நெருப்பைப் போலச் சிவந்த, உருகிய ஆயுதங்களை எடுத்து நீரில் அமிழ்த்தினான்.

    ' அருமை. எனக்கு இப்பொழுதுதான் புரிந்தது. உருக்குகளுக்கு உயிர் கிடைப்பது நீரில்தானே?'

    'இல்லை. இல்லை' எனச் சொன்ன கொல்லன், இவ்வாறு தொடர்ந்தான்.

    ' உருக்குக்கு உயிர் கிடைப்பது, தீயினால் உருக்கப்படும்பொழுது, குளிரடையச் செய்ய வேண்டிய நேரத்தில், குளிரடையும் பொழுது மட்டுமல்லாமல் தட்டுதல், தகர்த்தல் போன்ற எல்லாவற்றாலும்தான்'

    ' நீ சொல்வது சரி. மனிதர்களுக்கும் அவ்வாறேதான்' என வைத்தியர் அக் கருத்தோடு ஏகமனதாக ஒன்றுபட்டார்.

மூலம் (சிங்கள மொழியில்) - எஸ்.ஜீ. புஞ்சிஹேவா
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 

                     இலங்கை.


நன்றி - உயிர்மை

4 comments:

அகல்விளக்கு said...

நல்ல கதை...
பகிர்ந்தமைக்கு நன்றி....

M.Rishan Shareef said...

அன்பின் அகல்விளக்கு,

//நல்ல கதை...
பகிர்ந்தமைக்கு நன்றி....//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

குணமதி said...

///' உருக்குக்கு உயிர் கிடைப்பது, தீயினால் உருக்கப்படும்பொழுது, குளிரடையச் செய்ய வேண்டிய நேரத்தில், குளிரடையும் பொழுது மட்டுமல்லாமல் தட்டுதல், தகர்த்தல் போன்ற எல்லாவற்றாலும்தான்'

' நீ சொல்வது சரி. மனிதர்களுக்கும் அவ்வாறேதான்' என வைத்தியர் அக் கருத்தோடு ஏகமனதாக ஒன்றுபட்டார்///

இறந்த மனிதரை உயிர்ப்பிப்பதும் - அவ்வாறே!

எனபது புரியும்படியாக இல்லையே!

M.Rishan Shareef said...

அன்பின் குணமதி,

///' உருக்குக்கு உயிர் கிடைப்பது, தீயினால் உருக்கப்படும்பொழுது, குளிரடையச் செய்ய வேண்டிய நேரத்தில், குளிரடையும் பொழுது மட்டுமல்லாமல் தட்டுதல், தகர்த்தல் போன்ற எல்லாவற்றாலும்தான்'

' நீ சொல்வது சரி. மனிதர்களுக்கும் அவ்வாறேதான்' என வைத்தியர் அக் கருத்தோடு ஏகமனதாக ஒன்றுபட்டார்///

இறந்த மனிதரை உயிர்ப்பிப்பதும் - அவ்வாறே!

எனபது புரியும்படியாக இல்லையே! //

ஒரு மனிதனுக்கு இன்பம் போலவே துன்பங்களும் அவசியம் அல்லவா? இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வெறுமனே வாழ்ந்தால் அவன் உயிரிருந்தும் சடலத்துக்குத்தானே சமம்?

அதைத்தான் இந்தக் குறுங்கதை குறிக்கிறது நண்பரே.

கருத்துக்கு நன்றி !