Wednesday, April 8, 2015

அந்தகாரத்துக்கு முன்பு


வாசலருகே மலர்ச்செடியின்
பூக்களுக்கு வரும் வண்ணத்துப் பூச்சிகளே
கொழும்புக்குச் செல்லும் வழி அறிவீரோ
அம்மாவின் மரணத்துக்காக இன்றிரவு
பாடப்படப்போகும் போதனை கீதங்களை
கொழும்புக்குச் சென்று
அப்பாவிடம் உரைப்பீரோ

அமாவாசைக் கனவுகள் வந்து
தம்பியை அச்சுறுத்துகையில்
நள்ளிரவில் தாலாட்டுக் கவிகள் பாட
யாருமில்லை வீட்டில் இப்பொழுது
இன்றிரவு சொந்தங்கள்
எம் குடிசையில் விழித்திருப்பர்
எவ்வாறிருக்குமோ நாளை
நாம் உணரும் அந்தகார இருள்

வண்ணத்துப் பூச்சிகளே
மெதுமெதுவாக
மறைந்துகொண்டிருக்கிறான் சூரியன்
இனி
பாழடைந்த வெண்ணிலவின் உச்சியில்
உறைந்துவிடும் அம்மாவின் வாசனை
அனைத்தும் வீழ்ந்தழிவதற்கு முன்பு
மயானத்துக்கு வந்து நாளை
கூட்டிச் செல்லுங்கள் அப்பா
சிறைச்சாலைக்கு எம்மையும்

- சந்திரகுமார விக்ரமரத்ன
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - மலைகள் இதழ், வல்லமை இதழ், இனியொரு இதழ், பதிவுகள் இதழ்